Wednesday, October 16, 2013

பிரசவம் இனிதே நடக்க உதவும் பதிகம்

http://3.bp.blogspot.com/-3GLPojCRDe4/UP7FFh5EmgI/AAAAAAAAALw/z-y8Cs2JMtk/s800/Manikka_Vinayaka.jpg
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார்
THAYUMANAVAR
அருள்மிகு தாயுமானவ சுவாமி 
http://lh5.ggpht.com/-1l9O8J3Zxlg/THSkFWILvvI/AAAAAAAABrA/OfmWWh3RpvU/2.jpg
அருள்மிகு மட்டுவார்குழலி உடனுறை தாயுமானவ சுவாமி, திருச்சி.
 
திருச்சிற்றம்பலம்

தலம் – திருச்சிராப்பள்ளி                                          பண் – குறிஞ்சிப்பண்

நன்றுடையானை தீயதிலானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமை ஒருபாகம் உடையானை
சென்றடையாத திருவுடையானை சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே.

கைம்மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக்கழை பாய்வான்
செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி
வெம்முக வேழத்து ஈர்உரி போர்த்த விகிர்தா நீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழி அன்றே.

மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல்
செந்தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி
சந்தம் மலர்கள் சடைமேல் உடையார் விடைஊரும்
எம்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே.

துறைமல்கு சாரல் சுனைமல்கு நீலத்து இடைவைகிச்
சிறைமல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளிக்
கறைமல்கு கண்டன் கனல்எரி ஆடும் கடவுள்ளம்
பிறைமல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே.

கொலைவரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்
சிலைவரையாகச் செற்றன ரேனும் சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே.

வெய்ய தண்சாரல் விரிநிற வேங்கைத் தண்போது
செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்
தையலோர் பாகம் மகிழ்வர் நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமும் கொள்வர் ஆரிவர் செய்கை அறிவாரே.

வேயுயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும்
சேயுயர் கோயில் சிராப்பள்ளி மேவிய செல்வனார்
பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று ஆகாதே.

மலைமல்கு தோளன் வலிகெட ஊன்றி மலரோன்தன்
தலைகலனாகப் பலிதீர்ந்து உண்பர் பழி ஓரார்
சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்
சிலஅல போலும் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே.

அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்
கரப்புள்ளி நாடிக் கண்டிலரேனும் கல் சூழ்ந்த
சிராப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே.

நாணாது உடை நீத்தோர்களும் கஞ்சி நாள் காலை
ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள் உரைக்கும் சொல்
பேணாது உறுசீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார்
சேணார் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே.

தேன்நயம் பாடும் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல் சங்கேறும் கழுமல ஊரில் கவுணியன்
ஞானசம்பந்தன் நலமிகு பாடல் இவை வல்லார்
வான சம்பந்தத் தவரொடும் மன்னி வாழ்வாரே.

திருச்சிற்றம்பலம்
 
 
மேற்கண்ட பதிகம் திருஞானசம்பந்தரால் திருச்சிராப்பள்ளி தாயுமானவ சுவாமி மீது பாடப்பட்டது. திருச்சிராப்பள்ளி தலத்திற்கு தென் கயிலாயம் என்ற பெயரும் உண்டு. இத்தலத்து இறைவனின் மீது அன்பு கொண்ட ரத்னாவதி என்னும் வணிகர் குலப்பெண் காவிரி வடகரையில் வாழ்ந்து வந்தாள். இவளுடைய பிரசவ காலத்தில் காவிரியில் நீர் பெருகியதால் தாய், தந்தையர் யாரும் உதவ இயலவில்லை. கணவன் பொருளீட்ட கடல் கடந்து செல்ல, ரத்னாவதி மிகுந்த வருத்தமுற்று இறைவனை நினைத்தாள்.
 
அவளின் வருத்தம் நீங்க இறைவன் சிவபெருமான் அவளுடைய தாய் வடிவில் வந்து ரத்னாவதிக்கு மருத்துவம் செய்து, பிரசவம் இனிதே நடக்க அருளினார். இத்தலத்தின் இறைவனை வணங்கி மேற்கண்ட பதிகத்தை தினமும் ஓதிவர பிரசவ காலத்தில் எவ்வித துன்பமும் ஏற்படாமல், பிரசவம் இனிதே நடக்கும் என்பது நம் முன்னோர் அனுபவித்த உண்மையாகும்.
 
இக்காலத்தில் சுகப்பிரசவம் என்பது அரிதாக உள்ளது. எதற்கு எடுத்தாலும் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்க்கும் இக்காலத்தில், கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு இந்த பதிகம் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.
 
கரு சுமக்கும் பெண்கள் இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றவும். முதலில் தங்கள் குலதெய்வத்தை வணங்கவும்.  பின்பு மலைக்கோட்டை முழு முதற்கடவுள் உச்சிப்பிள்ளையாரை வணங்கவும். பின்பு தங்களின் இஷ்ட தெய்வத்தை வணங்கவும். அதன் பின்பு திருச்சி மலைக்கோட்டை இறைவன் தாயுமானவ சுவாமியை வணங்கவும். இந்த பதிகத்தை ஓதி முடிக்கவும்.
 
இவ்வாறு தினமும் ஓதி வர பிரசவம் எவ்வித துன்பமும் இல்லாமல் பிரசவம் எளிதாக நடக்கும் என்பது திண்ணம்.
 
 
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் தாயுமானவா போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
 
 

No comments:

Post a Comment