Thursday, December 19, 2013

நடராஜப்பத்து – ஆருத்ரா திருநாள் சிறப்புப் பதிவு

Nataraja-Sivagamasundari-nalvar-Screen

 

மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ மறைநான்கின் அடிமுடியும் நீ

மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ மண்டலமிரண்டேழு நீ

பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ பிறவும் நீ யொருவ நீயே

பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ பெற்றதாய் தந்தை நீயே

பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ போதிக்க வந்த குரு நீ

புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ

எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்குரைப்பேன்?

ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…!

 

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமி யாட

மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரமனாட

கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட

குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட குழந்தை முருகேசனாட

ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி அட்ட பாலகருமாட

நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட

வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை விரைந்தோடி ஆடி வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…!

 

கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி

காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே கட்டுண்டு நித்த நித்தம்

உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி ஓயாமலிரவு பகலும்

உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது ஒருபயனுமடைந்திலேனை

தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும் தாவரம் பின்னலிட்டு

தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இவ்வண்ணமாய்

தடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுனக்கழகாகுமா?

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…!

 

பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல

பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச மதுவல்ல சாலமல்ல

அம்புகுண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல

அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அறியமோகனமுமல்ல

கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி கொங்கணர் புலிப்பாணியும்

கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாம் கூறிடும் வயித்தியமுமல்ல

என்மனம் உன்னடிவிட்டு அகலாது நிலைநிற்க ஏது புகல வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…!

 

நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும் நின்செவியில் மந்தமுண்டோ

நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ

சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ

தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ தந்தை நீ மலடுதானோ

விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே

வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ

இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு இனியுன்னை விடுவதில்லை

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…!

 

வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதும்

வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்தபோதும்

மொழியென்ன மொகனையில்லாமலே பாடினும் மூர்க்கனே முகடாகினும்

மோசமே செய்யினும் தேசமே தவறினும் முழு காமியே ஆயினும்

பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ பார்ப்பவர்கள் பழியார்களோ

பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ பாலன் எனைக் காக்கொணாதோ

எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…!

 

அன்னைதந்தையர் என்னை ஈன்றதற்கழுவனோ அறிவிலாததற்கழுவனோ

அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக்கழுவனோ

முற்பிறப்பென்வினை செய்தேனென்றழுவனோ என் மூட உறவுக்கழுவனோ

முற்பிறப்பின் வினைவந்து மூளுமென்றழுவனோ முத்தி வருமென்றுணர்வனோ

தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ தவமென்ன எனுறழுவனோ

தையலார்க்கழுவனோ மெய்தனக்கழுவனோ தரித்திர தசைக்கழுவனோ

இன்னமென்னப் பிறவிவருமோ வென்றழுவனோ எல்லாமுரைக்க வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…!

 

காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ கன்னியர்கள் பழிகொண்டனோ

கடனென்று பொருள்பறித்தே வயிறெரித்தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ

தாயாருடன் பிறவிக்கென்னவினை செய்தனோ தந்தபொருளிலை யென்றனோ

தானென்று கெர்வித்து கொலைகளவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ

வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ வாணரைப் பழித்திட்டனோ

வடவுபோலே பிறரைச் சேர்க்கா தடித்தனோ வந்தபின் என் செய்தனோ

ஈயாத லோபி என்றே பெயரெடுத்தனோ எல்லாமும் பொறுத்தருளுவாய்

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…!

 

தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன தன்பிறவியுறவு கோடி

தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன தாரணியையாண்டுமென்ன

சேயர்கள் இருந்தென்ன குருவாயத் திரிந்தென்ன சீஷர்கள் இருந்துமென்ன

சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன நதிகளெல்லாம்

ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை ஒன்றினைத் தடை செய்யுமோ

உதவுமோ இதுவெல்லாம் உபாயம் கருதியே உந்தனிருபாதம் பிடித்தேன்

யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக் கண்பார்வையது போதுமே

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…!

 

இன்னமும் சொல்லவோ உன்மனம் கல்லோ இரும்போ பெரும்பாறையோ

இருசெவியும் மந்தமோ பார்வையும் அந்தமோ இது உனக்கழகு தானோ

என்னென்ன மோகமோ இதுஎன்ன கோபமோ இதுவே உன்செய்கை தானோ

இருபிள்ளைதாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ

உன்னை விட்டெங்கெங்கு சென்றாலும் வாழ்வனோ உனையடுத்துங் கெடுவனோ

ஏழை என் முறையீட்டில் குற்றமென கூறுநீ முப்புரம் எரித்த ஐயா

என் குற்றமாயினும் உன் குற்றமாயினும் இனியருள் அளிக்க நினைவாய்

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…!

 

நாம் மேலே காண்பது சிறுமணவை முனிசாமி முதலியார் இயற்றிய நடராஜப்பத்து என்னும் துதியாகும்.  இது சைவர்களின் கோவில் எனப்படும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜ பெருமானை குறித்து பாடப்பட்டதாகும்.

இதனை ஒவ்வொரு திருவாதிரை திருநாளிலும் சிவத்தலத்திலுள்ள நடராஜர் சந்நிதியில் பாடி பாராயணம் செய்து வர நடராஜர் அருளால் 16 பேறுகளும் பெற்று முக்தியடைவர்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் தில்லைக்கரசே போற்றி…!!!

திருச்சிற்றம்பலம் – பொன்னம்பலம் – அருணாச்சலம்

 

2 comments:

  1. nataraj pathu eathi ethanai murai parayanam seiya vendum

    ReplyDelete
    Replies
    1. ஒரே ஒரு முறை பாராயணம் செய்தாலே போதுமானது...!

      திருச்சிற்றம்பலம் - பொன்னம்பலம் - அருணாச்சலம்

      Delete