Wednesday, September 18, 2013

பிரதோஷங்களின் வகைகளும் - பலன்களும்






பிரதோஷ காலங்கள் ஐந்து வகைப்படும்.

1.   தினப் பிரதோஷம்
2.  பட்ச பிரதோஷம்
3.  மாத பிரதோஷம்
4.  மகா பிரதோஷம்
5.  பிரளயப் பிரதோஷம்

தினப் பிரதோஷம்:

தினமும் சூரியன் மறைவதற்கு முன் ஒன்றரை மணி நேரமும், மறைந்த பின்பு ஒன்றரை மணி நேரமும் ஆக மொத்தம் 3 மணி நேர கால அளவு தினப் பிரதோஷம் எனப்படும்.

பட்ச பிரதோஷம்:

வளர்பிறையில் அதாவது பௌர்ணமிக்கு முன்பாக வரும் திரயோதசி திதி பட்ச பிரதோஷம் எனப்படும்.  இது தேவர்க்ளுக்கு உரியது.

மாத பிரதோஷம்:

தேய்பிறையில் அதாவது அமாவாசைக்கு முன்பாக வரும் திரயோதசி திதி மாத பிரதோஷம் எனப்படும்.  இது மனிதர்களுக்கு உரியது.

மகா பிரதோஷம்:

தேய்பிறை சனிக்கிழமைகளில் வரும் மாத பிரதோஷம் மகா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனப்படும்.  இது மிகவும் சிறப்பானது.  சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவபூஜை செய்த பலன் உண்டாகும்.

பிரளய பிரதோஷம்:

பிரளய காலத்தில் வரும் பிரதோஷம் பிரளய பிரதோஷம் எனப்படும்.  இந்த பிரளய பிரதோஷ காலத்தில் எல்லா உயிர்களும் (நந்தியும், ஆதி சித்தர் காகபுசுண்டரும் தவிர) சிவனுள் ஒடுங்கும்.

பிரதோஷம் வரும் கிழமை
பலன்கள்
ஞாயிறு
அனைத்து நலன்களையும் தரும்
திங்கள்
சிவசக்தி அருளைத் தரும்
செவ்வாய்
பசி, வறுமை, நோய் போக்கும்
புதன்
நன்மக்கட் பேறு அளிக்கும்
வியாழன்
திருமணத்தடை நீக்கும்
வெள்ளி
எதிரிகளை அழிக்கும்
சனி
அனைத்து பாவங்களையும் போக்கும்

கார்த்திகை மாத சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானது.  முதன் முதலில் பிரதோஷம் இந்த நாளில் தான் அமைந்தது.  அன்று தேவர்களும், மும்மூர்த்திகளும் உண்ணாநிலையை கடைபிடித்து சிவனருள் பெற்றார்கள்.  தொடர்ந்து 12 பிரதோஷங்களை கடைபிடித்தால் இறைவனருள் கிட்டும்.  நம் பாவங்கள் தொலையும்.  நந்தி நம் கோரிக்கைகளை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது திண்ணம்.

நந்தி தேவர் துதி:

வந்திறை அடியில் தாழும் வானவர் மகுடகோடி
பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையால் தாக்கி
அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பையாக்கும்
நந்தியெம் பெருமான் பாத நகைமலர் முடிவேல் வைப்போம்.


திவ்ய பிரதோஷம்:

துவாதசி திதியும், திரயோதசி திதியும்   சேர்ந்து வரும் பிரதோஷம் திவ்ய பிரதோஷம் எனப்படும்.  அன்று மரகத லிங்கத்திற்கு அபிசேகம் செய்தால் முன்வினைகள் நீங்கும்.  தீராத வியாதிகள், வழக்குகள் தீரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பெருகும். இதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் பஞ்சலோக சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்து மேற்கண்ட பலனை அடையலாம்.

மகா பிரதோஷம் என்னும் தீப பிரதோஷம்:

சனிக்கிழமையும், திரயோதசி  திதியும் இணைந்து வருகிற தினம் மகா பிரதோஷம் எனப்படும். அன்று முறையான பிரதோஷ விரதம் இருந்து சிவாலயம் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.  உங்கள் வயது எண்ணிக்கை இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி சிவபெருமானை வணங்கினால் இப்பிறவியில் இப்போதைய வயது வரை செய்த எல்லா பாவங்களும் நீங்கும்.

சப்தரிஷி பிரதோஷம்:

பிரதோஷ காலத்தில் முறையாக விரதம் மற்றும்ம் வழிபாடுகளை முடித்த பின்பு, வெட்ட வெளியில், வடக்கு திசையில் வானம் முழுமையாக தெரிகிற இடத்தில் நின்று கவனித்தால் சப்த ரிஷி மண்டலம் எனப்படும் விண்மீன் கூட்டம் தெரியும்.  அந்த ஏழு ரிஷிகளை வணங்கினால் அவர்கள் ஆசிகள் கிடைக்கும். வானம் தெளிவாக தெரியாவிடில் கிழக்கு திசை நோக்கி நின்று சப்த ரிஷிகளை மனதில் துதித்து வணங்கினால் எல்லா நலங்களும் உண்டாகும்.

ஏகாட்ச்சர பிரதோஷம்:

ஒரு ஆண்டில், ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷம் ஏகாட்ச்சர பிரதோஷம் எனப்படும். அன்றைய தினம் விரதமிருந்து சிவாலயம் சென்று ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சொல்லி சிவபெருமானுக்கு வழிபாடு செய்தால் கோடி தோஷங்கள் நீங்கும்.

அர்த்தநாரி பிரதோஷம்:
ஒரு ஆண்டில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால், அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் பிரிந்து வாழும் தம்பதிகள் விரதமிருந்து சிவாலயம் சென்று சிவ வழிபாடு செய்தால் கர்ம வினைகள் நீங்கி மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள். மேலும் கருத்து வேற்றுமையோடு வாழும் தம்பதிகள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கருத்து வேற்றுமை நீங்கும். தம்பதிகளிடையே அன்பும், பாசமும், ஒற்றுமையும் மேலோங்கும்.  எல்லா நன்மைகளும் உண்டாகும்.

முக்கரண பிரதோஷம்:

ஒரு ஆண்டில் மூன்று மகா பிரதோஷம் வந்தால் அதை முக்கரண பிரதோஷம் எனப்படும். விரதமிருந்து சிவாலயம் சென்று சிவ வழிபாடு செய்திடில் வறுமை, பஞ்சம், பட்டினி நீங்கி சிவபெருமானின் அருளுடன் அஷ்ட லட்சுமிகளின் அருளும் கிட்டும்.

பிரம்ம பிரதோஷம்:

பிரம்மா, திருவண்ணாமலையில் தனக்கு ஏற்பட்ட சாபம் விலக, ஒரு ஆண்டில் வரும் நான்கு சனி பிரதோஷத்தை முறையாக கடைப்பிடித்து திருவிரிஞ்சிபுரத்தில் சாப விமோசனம் பெற்றார்.  நாமும் இதனை கடைபிடித்தால் நம் முன்னோர்களின் கர்ம வினையும், நம்முடைய கர்ம வினைகளும், முற்பிறவி சாபங்களும் நீங்க பெறலாம்.

ஆட்சரப பிரதோஷம்:

ஒரு ஆண்டில் ஐந்து மகா பிரதோஷம் வந்தால் அதற்க்கு ஆட்சரப பிரதோஷம் என்று பெயர்.  தாருகா வனத்து முனிவர்கள் தான் என்ற அகந்தை கொண்டு சிவபெருமானை எதிர்க்க, சிவபெருமான் பிட்சாடனர் வடிவத்தில் வந்து அவர்களின் அகந்தையை அழித்தார்.  தங்கள் பிழை உணர்ந்த முனிவர்கள் இந்த பிரதோஷ விரதத்தை கடைப்பிடித்து சாப விமோசம் பெற்றார்கள்.  அறிந்தே பிழைகள் செய்தவர்கள் இந்த பிரதோஷத்தினை பின்பற்றலாம்.

கந்த பிரதோஷம்:

சனிக்கிழமையும், திரயோசசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்த பிரதோஷம் என்று பெயர்.  இது முருக பெருமான் சூர சம்ஹாரத்திற்கு முன்பாக வேல் வேண்டி சிவபெருமானை சிக்கல் என்னும் தலத்தில் வழிபட்ட பிரதோஷம் ஆகும்.  கந்தவேளின் அருள் பெற நினைப்பவர்கள் இந்த கந்த பிரதோஷ வழிபாட்டைச் செய்யலாம்.

சட்ஜ பிரபா பிரதோஷம்:

தேவகி வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையால் தனக்கு அழிவு ஏற்படும் என்பதை அறிந்த கம்சன், தேவகியையும் வசுதேவரையும் சிறை வைத்தான். ஏழு குழந்தைகளை கம்சன் கொன்றான். எனவே எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை தேவகியும், வசுதேவரும் கடைபிடித்ததால் கண்ணன் பிறந்தான்.

ஒரு ஆண்டில் வரும் ஏழு மகா பிரதோஷங்களை கடைபிடித்தால் பிறவியற்ற நிலையை பெற்று சிவலோக பதவியை அடையலாம்.

அஷ்டதிக் பிரதோஷம்:

ஒரு ஆண்டில் வரும் எட்டு மகா பிரதோஷங்களை முறையாக கடைபிடித்தால் எண்திசை காவலர்கள் மனம் மகிழ்ந்து நீடித்த புகழ், கீர்த்தி, செல்வாக்கு இவற்றை அளிப்பார்கள்.

நவகிரக பிரதோஷம்:

ஒரு ஆண்டில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவகிரக பிரதோஷம் எனப்படும். இப்படி ஒன்பது பிரதோஷம் வருவது மிக மிக அரிது.  அப்படி அமையும் பிரதோஷங்களை, கடைபிடித்தால் எல்லா வகை  தோஷங்களும் விலகும். 16 வகை பேறுகளும் கிட்டும்.

துத்த பிரதோஷம்:

ஒரு ஆண்டில் பத்து மகா பிரதோஷங்கள் வந்தால் அவற்றிற்கு துத்த பிரதோஷம் என்று பெயர்.  இவ்வாறு வரும் பிரதோஷங்களை முறையாக கடைபிடித்தால் எல்லா கர்ம வினைகளும் நீங்கி வாழ்வில் மிக உயரிய நிலைக்கு செல்வர்.  அவர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க இயலாது.  ராவணன் இதை கடைபிடித்து நவகோள்களையும் அடிமை கொள்ளும் பேறினைப் பெற்றான்.


தென்னாடுடைய சிவனே போற்றி...!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

ஓம் சிவ சிவ ஓம்

No comments:

Post a Comment