Friday, December 15, 2017

கடன் தீர்க்கும் உன்னத பதிகம்

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையானே போற்றி…!!!

saraparapeswararthirucherai s

runavimochana lingam

தலம் : திருச்சேறை                                                                                                                     அருளியவர் : திருநாவுக்கரசர்

    1. பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடும்
      கூரி தாய அறிவுகை கூடிடும்
      சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி
      நாரி பாகன்றன் நாம நவிலவே.
    2. என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
      மின்னு வார்சடை வேத விழுப்பொருள்
      செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி
      மன்னு சோதிநம் பால்வந்து வைகவே.
    3. பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி
      இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடும்
      சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல்
      மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.
    4. மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
      ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள்
      சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய
      ஆட லான்தன் அடியடைந் துய்ம்மினே.
    5. எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன்
      துண்ணென் தோன்றிற் துரக்கும் வழிகண்டேன்
      திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை
      அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
    6. தப்பி வானந் தரணிகம் பிக்கிலென்
      ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்
      செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய
      அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
    7. வைத்த மாடும் மடந்தைநல் லார்களும்
      ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார்
      சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை
      அத்தர் தாமுள ரஞ்சுவ தென்னுக்கே.
    8. குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ
      துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
      இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய
      அலங்க னாருள ரஞ்சுவ தென்னுக்கே.
    9. பழகி னால்வரும் பண்டுள சுற்றமும்
      விழவிடா விடில் வேண்டிய எய்தொணா
      திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய
      அழக னாருள ரஞ்சுவ தென்னுக்கே.
    10. பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான்
      வருந்த வூன்றி மலரடி வாங்கினான்
      திருந்து சேறையிற் செந்நெறி மேவியங்
      கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே.

நாம் மேலே காணும் பதிகம் கடன் தீர்க்கும் பதிகம் ஆகும்.  இதனை அருளியவர் திருநாவுக்கரசர் ஆவார்.  இப்பதிகம் திருச்சேறை என்னும் தலத்தில் அருளப்பட்டதாகும்.  இத்தலத்து இறைவன் பெயர் செந்நெறியப்பர் – சாரபரமேசுவரர்.  இத்தலத்து இறைவி பெயர் ஞானவல்லி – ஞானாம்பிகை.  இத்தலத்தில் மார்கண்டேய முனிவர் ருணவிமோசன லிங்கத்தினை நிறுவி பூசித்து தனது பிறவிகடன் நீங்க பெற்றார்.

இதனை முதன் முதலில் தொடங்கும் போது திங்கட்கிழமையில் தொடங்க வேண்டும்.  தினமும் 1 முறை இப்பதிகத்தை கடன் தீர்த்த இறைவனை நினைத்து உள்ளன்புடன் பாராயணம் செய்ய இப்பிறவியின் கடன்கள் அனைத்தும் நீங்கி பிறவியில்லா பெருநிலை சித்திக்கும்.  இதனை தொடர்ந்து பாராயணம் செய்து வர எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும் என்பது உறுதி.

இப்பதிகத்தை பாராயணம் செய்பவர்கள் நிரந்தரமாக அசைவத்தை நிறுத்தியிருக்க வேண்டும்.  இப்பதிகத்தை பாராயணம் செய்பவர்களின் அனைத்து விதமான இடர்களையும், கடன்களையும் இறைவன் நீக்கியருள்வார் என்பது திண்ணம்.  மீண்டும் இடர்களும், கடன்களும் ஏற்படாது என்பது உறுதி.  இப்பதிகத்தை தினமும் பாராயணம் செய்பவர்கள் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் மற்றும் கடன்களைப் பற்றி கவலை கொள்ள வேண்டிய அவசியமே வாழ்வில் வராது.

இப்பிறவியின் கடன்கள் மட்டுமல்லாது அனைத்து இடர்களையும் போக்கி துன்பமில்லா இனிய வாழ்வை தரும் – கடன் தீர்க்கும் உன்னமான பதிகத்தை கடன் உள்ளவர்கள் மட்டுமல்லாது பிறவி கடன்களை போக்கி பிறவியில்லா பெருவாழ்வினை வாழ நினைப்பவர்களும் நிம்மதியான வாழ்வு பெற ஆதி சித்தன் - கருணையின் வடிவம் – அருணையின் நாயகன் எல்லாம் வல்ல அண்ணாமலையானின் பொற்பாதம் பணிந்து பதிவிடுகிறேன்.


எதுவும் என்னுடையதல்ல…!  அனைத்தும் உன்னுடையதே…!  அருளாளா…!! அருணாச்சலா…!!!

திருச்சிற்றம்பலம் – பொன்னம்பலம் – அருணாச்சலம்

No comments:

Post a Comment