Saturday, December 2, 2017

பயணத்தில் காக்கும் முருகனின் மந்திரம்

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையானே போற்றி…!!!

manivelu-saivite-sym-vel_ful


வேகமான இவ்வுலகில் குறுந்தொலைவு பயணமாகிலும், நெடுந்தொலைவு பயணமாகிலும் அதில் வேகமே தென்படுகிறது.  வேகமான பயணத்தில் விபத்துகள் ஏற்பட்டு அதன் மூலம் விலைமதிப்பில்லாத உயிரிழப்புகள் நேருவது வாடிக்கையாகி விட்டது.  இத்தகைய பயணங்களில் பாதுகாப்பை அளிக்கும் முருகனின் வேல் மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


”வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்பிரமண்ய வேல்”


இந்த மந்திரம் அகத்தியர் பெருமானால் நாடி மூலம் தரப்பட்ட உன்னதமான ஒரு மந்திரம் ஆகும்.  இந்த மந்திரத்தை அகத்தியர் விஜயம் மாத இதழில் கண்டேன்.  இதனை பல முறை பயன்படுத்தி இதன் சக்தியை உணர்ந்திருக்கிறேன்.  இந்த மந்திரத்தின் பெருமையை உணர்த்தவே இதனை நம் வலைப்பூவில் பதிவிட்டுள்ளேன்.


இதனை பயணம் செய்வதற்கு முன்பாக 18 முறைகள் செபித்து விட்டு பயணம் மேற்கொள்ள அந்த பயணத்தில் எவ்வித தடங்கல்களும் இராது.  பாதுகாப்பான பயணமாக அமையும் என்பது உறுதி.  இதை பயன்படுத்துபவர்கள் இதன் சக்தியை உணர்வார்கள்.  மேலும் தடங்கல்கள் என்பது விபத்துக்கள் மட்டுமல்ல, காரிய தடையும் தடங்கல் தான் என்பதை உணர வேண்டும்.


இந்த மந்திரம் தெரிந்திருந்தும் பயணம் செய்வதற்கு முன்பாக இதனை செபிக்க மறந்தால் அது அவரவர் வினைப்பயன் என்று கருத வேண்டும்.  அவ்வாறு செபிக்க மறந்து விபத்தில் சிக்கிய அனுபவமும் எனக்குண்டு.  இதை செபித்த பின்பு செய்த பயணங்கள் அனைத்தும் பாதுகாப்பான பயணங்களாகவே அமைந்திருக்கின்றன.  மயிரிழையில் உயிர் தப்பிய அனுபவமும் எமக்குண்டு.


இதனை பயன்படுத்தி அனைவரும் விபத்தில்லாத – தடங்கல்கள் இல்லாத பயணங்களை மேற்கொண்டு நலமுடன் - காரிய சித்தியுடன் வாழ எல்லாம் வல்ல தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை வேண்டுகிறேன்.


எதுவும் என்னுடையதல்ல.  அனைத்தும் உன்னுடையதே.  அருளாளா…! அருணாச்சலா…!!

திருச்சிற்றம்பலம்…!  பொன்னம்பலம்…!!  அருணாச்சலம்…!!!


No comments:

Post a Comment